இமயமலையில் எட்டி எனப்படும் பனிமனிதன் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய இந்திய ராணுவம் அதுதொடர்பான படங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பனிப்பிரதேசங்களான இமயமலையில் எட்டி எனப்படும் பனிமனிதன் வாழ்ந்து வருவதாக பலதரப்பட்ட கதைகளை நாம் கேட்டு வருகிறோம். இந்த எட்டிக்கள் சுமார் 15 அடிக்கும் மேல் மிகப்பெரிய உருவத்துடன் மனிதக்குரங்கு போன்ற தோற்றத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வகை எட்டிக்கள் இந்தியாவில் இமயமலை, ரஷியாவில் சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள பனிமலைகளில் வாழ்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், கதை மூலம் மட்டுமே கேட்டு வந்த இந்த எட்டிக்கள் இமயமலையில் இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் எட்டிக்களின் காலடி என்று கருதப்படும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 3,500 மீட்டர் உயரமுள்ள இமயமலையின் லாங்மாலே கார்கே எனுமிடத்தில் அமைந்துள்ள ராணுவத்தின் மகாலு தளத்தின் அருகே ஏப்ரல் 9-ஆம் தேதி மிகப்பெரிய காலடித்தடங்களை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது கணக்கிடப்பட்டது.
இந்த புகைப்படங்களை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டு வருகிறது.