பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.2 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வைப் போன்றே இந்தத் தேர்விலும் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 76,019 பேர் எழுதினர். இவர்களில் பள்ளிகளில் படித்த மாணவியர் 4 லட்சத்து 68,570 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 69 ஆயிரத்து 289 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.
பொதுத்தேர்வு முடிவுகள் www.dge1.tn.nic.in, www.dge.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில் 95.2 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் (94.5) தேர்ச்சி சதவீதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கம்போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய 4,816 மாற்றுத் திறனாளிகளில் 4,395 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று 143 சிறைவாசிகளில் 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாட வாரியான தேர்ச்சியில் அதிகபட்சமாக அறிவியலில் 98.56 சதவீதத்தினர் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் (98.53) முதலிடத்தையும், ராமநாதபுரம் (98.48) இரண்டாமிடத்தையும், நாமக்கல் (98.45) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. 89.98 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
6,100 பள்ளிகள் சதம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,548. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,286, உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,262 ஆகும். இவற்றில் தற்போது 6,100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தேர்வு
முடிவு மதிப்பெண்களுடன் அனுப்பப்பட்டது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இதையடுத்து வரும் மே 2-ஆம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் மே 6-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சிறப்பு துணைத் தேர்வு: மார்ச் 2019-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறாதோருக்கும், தேர்வுக்கு வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுகள் வரும் ஜூன் 14 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனி அறிவிப்பு வெளியாகும்.
பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்
அரசுப் பள்ளிகள் 92.48
அரசு உதவி பெறும்
பள்ளிகள் 94.53
மெட்ரிக். பள்ளிகள் 99.05
பெண்கள் பள்ளிகள் 96.89
ஆண்கள் பள்ளிகள் 88.94
இருபாலர் பள்ளிகள் 95.42
பொதுத்தேர்வு முடிவுகள் புள்ளி விவரம்
தேர்வெழுதிய மொத்த மாணவ, மாணவியர் 9,76,019
தேர்ச்சி சதவீதம் 95.2
(கடந்த ஆண்டு தேர்ச்சி 94.5)
மாணவியர் தேர்ச்சி சதவீதம் 97
மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93.3
பொதுத்தேர்வில் பங்கேற்ற மொத்த பள்ளிகள் 12,548
நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 6,100
அரசுப் பள்ளி தேர்ச்சி சதவீதம் 92.48
மாவட்ட அளவில் முதலிடம் திருப்பூர் (98.53)
பாடவாரியாக அதிக தேர்ச்சி அறிவியல் (98.56)
அறிவியலில் 98.56% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியான தேர்ச்சியில் அதிகபட்சமாக அறிவியலில் 98.56 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பாட வாரியான தேர்ச்சி சதவீதம்
அறிவியல் 98.56
ஆங்கிலம் 97.35
சமூக அறிவியல் 97.07
கணிதம் 96.46
மொழிப் பாடம் 96.12