நிகழாண்டு ஹஜ் பயண திட்டமிடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்திலிருந்து நிகழாண்டு 4 ஆயிரத்து 636 பேர் அரசு மூலம் மெக்காவுக்கு ஹஜ் புனிதப் பயணம் செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில ஹஜ் கமிட்டிகள் செய்கின்றன. ஒவ்வொரு பயணிகளிடமும் இதற்கு கட்டணமாக ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் வரை ஹஜ் கமிட்டி பெறுகிறது.
இந்த நிலையில், நிகழாண்டு ஹஜ் ஏற்பாட்டில் உள்ள பல்வேறு குறைபாடுகளால் ஹஜ் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி பிரச்னைகளை சரிசெய்ய வேண்டியது ஹஜ் கமிட்டியின் கடமையாகும்.
ஹஜ் பயணிகளை 3 நாள்கள் முன்னதாகவே வரவழைத்து சென்னையில் தங்குவதால் பணச் செலவு உள்பட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. சிறிய மாநிலமான கேரளத்தில் கொச்சி, கோழிக்கோடு ஆகிய இரண்டு நகரங்களிலிருந்து ஹஜ் விமானங்கள் புறப்படும்போது, பெரிய மாநிலமான தமிழகத்தில் சென்னையிலிருந்து மட்டும் புறப்படுவது ஏன் என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
ஹஜ் கமிட்டி தலைவரின் வருகைக்காக, விமான நிலையம் சென்ற ஹஜ் பயணிகள் பேருந்தை விட்டு இறங்க விடாமல் காத்திருக்க வைக்கப்பட்டனர். ஹஜ் பயணிகளின் நலன் கருதி எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகளைக் களைய மத்திய, மாநில ஹஜ் கமிட்டிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.