மாநகராட்சி, ஆதி திராவிடர், கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு மடிக்கணினிகள் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 3,051 அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 35 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கிடையே அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களை நடத்த ஏதுவாக அனைத்து முதுநிலை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை சார்பில் இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன. கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு உதவியாக இருப்பதால் இந்த முயற்சிக்கு ஆசிரியர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளன.
இதேபோன்று மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகள், கள்ளர், ஆதிதிராவிடர் நலத்துறைகளின் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் அரசு மடிக்கணினிகள் வழங்கக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
க்யூ-ஆர் கோடு தொழில்நுட்பம்: இதுகுறித்து ஆதி திராவிட பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் கூறும்போது, "புதிய பாடப்புத்தகங்களில் க்யூஆர்கோடு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதவிர கல்வித்துறையின் "யூடியூப்' வலைதளத்தில் பதிவேற்றப்படும் கற்றல் விடியோக்களும் ஆசிரியர்களுக்கு உதவியாக உள்ளன. இதன்மூலம் பாடம் நடத்தும்போது மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்கின்றனர். அதேநேரம் இந்த இணையதள வசதிகளை செல்லிடப்பேசிகள் மூலம் மாணவர்களுக்கு கற்று தருவதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதனால் திட்டத்தின் முழுப்பலன் மாணவர்களுக்குச் சேருவதில்லை. இத்தகைய பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்தான் அதிகம் படிக்கின்றனர்.
எனவே, மாணவர் நலன்கருதி மாநகராட்சி, கள்ளர், ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான முதுநிலை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என்றனர்.