அயோடின் கலந்த உப்பைத் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் விதியை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயபாலன் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் இயற்கை முறையில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை விதியில் சாதாரண உப்பை விற்கக்கூடாது. அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பைப் பறிமுதல் செய்கின்றனர். இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் அத்தொழிலை நம்பியுள்ள குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை உப்பைப் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
எனவே அயோடின் கலந்த உப்பைத் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ரவிசந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து, மத்திய சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.