கர்நாடகத்திலிருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புக் கருதி, ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கேரளம் மாநிலம், வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்புக் கருதி, கர்நாடக அரசு, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 4,800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் ஒரிரு நாள்களாக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கபினி அணை தனது கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே, அணையின் பாதுகாப்புக் கருதி, காவிரி ஆற்றில் புதன்கிழமை இரவு 27,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து 80,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட இந்தத் தண்ணீர், வியாழக்கிழமை நள்ளிரவில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கபடுகிறது. இதையடுத்து, இந்த தண்ணீர் பிலிகுண்டுலுவிலிருந்து அடுத்த சில மணி நேரத்தில் ஒகேனக்கல்லை வந்தடைந்து, பின்பு அங்கிருந்து மேட்டூர் அணையை அடைய உள்ளது.
குளிக்கத் தடை: கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரக்கூடும் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் சவாரி செல்லவும் தடை விதிக்கப்படுவதாகவும், மேலும், நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால், ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவுறுத்தியுள்ளார்.