சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சனிக்கிழமை நடைபெறவுள்ள திறந்தவெளி கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் பிரச்னை தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதம்தோறும் 2-ஆவது சனிக்கிழமை திறந்தவெளி குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, குடிநீர் வாரியத்தின் அனைத்துப் பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தபட்ட பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், குடிநீர் கழிவுநீர் சம்பந்தமாக 42 மனுக்கள் பெறப்பட்டு, 36 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.