காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாள்கள் நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் சிலை வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக 48 நாள்கள் வைக்கப்படுகிறது. அதன்படி, குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அத்திவரதரை 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில், அத்திவரதரை வரும் 17-ஆம் தேதியன்று மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப் போகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும். அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ஏராளமான பக்தர்கள் இருந்து வருகின்றனர். எனவே அத்திவரதரை பொதுமக்களின் தரிசனத்துக்காக மேலும் ஒரு மண்டலம், அதாவது 48 நாள்கள் வெளியில் வைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.