செவிலியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறைச் செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 243 செவிலியர்கள் ரூ.7 ஆயிரம் தொகுதிப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கணேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், செவிலியர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதாரத்துறைச் செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செவிலியர்கள் தரப்பில் வழக்குரைஞர் புகழ்காந்தி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.