இன்றைய சூழலில் அரசு ஓரளவு செயல்பட வைப்பதற்கு திமுக துணை நிற்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாவட்ட திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்து லாரிகள் மூலம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.35 லட்சம் நிவாரணப் பொருள்களும், சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணப் பொருள்களும், சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் ரூ.15 லட்சம் நிவாரணப் பொருள்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரள மாநிலத்தில் இருக்கும் திமுக சார்பில் எந்தெந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அங்கு நிவாரணப் பொருள்கள் பிரித்து வழங்கப்படும் என்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
முதல்வரை நேரடியாக சந்தித்து அவர் ஏன் நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இன்னும்
போகவில்லை என்று கேளுங்கள். நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதிகளில் இருந்துதான் ரூ.10 கோடிக்கு உதவி அளிக்கப்படுகிறது. தற்போது, அரசின் சார்பில் அவர்கள் நிதி ஒதுக்கப் போகிறார்கள். அந்த நிதியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய சொந்த நிதியிலிருந்துதான் கொடுக்கப் போகிறாரா என்றால் இல்லை. மக்களின் வரிப்பணம் அது. மக்களின் வரிப் பணத்தில்தான் இந்த அரசாங்கம் நடக்கிறது.
விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. இன்றைய சூழ்நிலையில் ஆளும் கட்சி செயல்படாமல் இருக்கிறது. எனவே, ஓரளவுக்கு செயல்பட வைப்பதற்கு திமுக துணை நிற்கிறது என்றார் மு.க. ஸ்டாலின்.