ஆடி மாத கருட சேவை: இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
ஆடிமாத கருட சேவையன்று தரிசன நேரம் குறைக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தபடி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை கருடசேவை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கும்.
கருட சேவையை முன்னிட்டு கிழக்கு கோபுரவாசல் பகல் 12 மணிக்கு மூடப்படும்.12 மணிக்கு முன்னர் கோயிலுக்குள் இருப்பவர்கள் 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம். மாலை 4 மணியிலிருந்து ஆடி கருட சேவை நிகழ்ச்சிகள் தொடங்கும்.
வெள்ளிக்கிழமை (ஆக. 16) மாலை 4 மணியுடன் பொதுதரிசனம் உள்பட வி.ஐ.பி, வி.வி.ஐ.பி.தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
17 -ஆம் தேதி அத்திவரதரை திருக்கோயில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்று மாலை குளத்தில் வைக்கப்படுவார்.
தரிசன காலம் நீட்டிப்பு இல்லை: காலநீட்டிப்பு எதுவும் கிடையாது. திருக்கோயில் மூலவரை வரும் 18-ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள்,பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.பொதுப்பணித்துறை,ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை ஆகியோர் அத்திவிழாவுக்காக செய்த பணிகள் மிகுந்த பாராட்டுக்குரியது. வருவாய்த்துறையினரும் கோயில் வளாகத்தை 22 பிரிவுகளாகப் பிரித்து கண்காணிப்புப் பணியினை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். விழா தொடக்கத்தில் 5,100 போலீஸாரும், பின்னர் 7,500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழா நிறைவு பெறும் நேரத்தில் 12 ஆயிரம் போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 1250 சக்கர நாற்காலிகள் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு இடங்களிலிருந்து 80 சிறப்புப் பேருந்துகள் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டிருந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஆக. 13,14,16 ஆகிய தேதிகள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வரும் 19-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும். அத்திவரதரை இதுவரை 86 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாகவும் ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.