நீட் தேர்வு: சட்டப் பேரவையை உடனே கூட்ட வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாக்களை நிறைவேற்ற சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
நீட் தேர்வு: சட்டப் பேரவையை உடனே கூட்ட வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாக்களை நிறைவேற்ற சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிப்பதை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்த விவரத்தை தமிழக சட்டப்பேரவைக்குத் தெரிவித்து விட்டோம் என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நீட் மசோதாக்கள் தொடர்பான வழக்கை முடித்து வைப்பதற்கு மட்டுமே அதிமுக அரசு உதவிசெய்து ஆர்வம் காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 
நீட்  மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையுமே எடுக்காமல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு பாழ்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதா, நிறுத்தி வைக்கப்பட்டதா என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்தப்பட்டது.  
இறுதியில் நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட கூட்டத் தயார் என்று முதல்வர் அறிவித்தார். 
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுகளை அதிமுக அரசு படித்துப் பார்த்தாலே நீட் மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டன. 
மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வரும். 
ஆனால், நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றி, அனுப்பி வைத்து மத்திய பாஜக அரசை சங்கடப்படுத்தக் கூடாது என்ற உள்நோக்கத்துடன்,  விளக்கம் கேட்கிறோம் என்ற போர்வையில் கடிதங்களை எழுதி, அதிமுக அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்து வருகிறது.
 இனியும், அந்த நாடகத்தைத் தொடராமல், ஏற்கெனவே வாக்குறுதியளித்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும். 
அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் சட்டப்பேரவையில் உள்ள  எதிர்க்கட்சிகளின்  தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமரைச் சந்தித்து நேரில் வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com