தென்மேற்குப் பருவமழை காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் வியாழன், வெள்ளி (ஆகஸ்ட் 15,16) ஆகிய இரண்டு நாள்களுக்குப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் வியாழக்கிழமையும் (ஆகஸ்ட் 15), நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையும் (ஆகஸ்ட் 16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.
பெரம்பலூரில் 80 மி.மீ.மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 80 மி.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 70 மி.மீ., சின்னக்கல்லார் மற்றும் தேனி மாவட்டம் பெரியாறில் 60 மி.மீ., வால்பாறை தாலூகா அலுவலகத்தில் 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் ஜி.பஜார், தேவாலா, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேனி மாவட்டம் தேக்கடி, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தலா 40 மி.மீ., பெரம்பலூர் மாவட்டம் வேம்பாவூர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 30 மி.மீ. மழை புதன்கிழமை பதிவாகி உள்ளது.
7 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் 102 டிகிரி, கடலூர், கரூர் மாவட்டம் பரமத்தி, நாகப்பட்டினம், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தலா 101 டிகிரி, சென்னை, திருச்சியில் தலா 100 டிகிரி வெயில் புதன்கிழமை பதிவானது.