மேட்டூர் அணையின் நீர் வரத்தும் திறப்பும் தற்போதைய நிலையிலேயே தொடர்ந்தால், ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணை நிரம்பும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த கன மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.
உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடிவரை அதிகரித்தது. கடந்த இரு நாள்களாக கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் மழை தணிந்துள்ளது. இதன்காரணமாக, கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை நொடிக்கு 50 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடியும் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 80.06 டி.எம்.சியாக உள்ளது.
மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 93.45 டி.எம்.சியாகும். அணைக்கு வரும் நீரின் அளவும் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் இதே நிலையில் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணை நிரம்பும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.