புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதுவை மட்டுமல்லாது, தமிழகத்தைச் சேர்ந்த மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இங்குள்ள நிர்வாகப் பிரிவில் ஊழியர்களை நியமித்தது தொடர்பாகவும், மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஜிப்மர் ஊழியர் சங்கங்கள் சிபிஐக்கும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கும் புகார்களை அனுப்பியிருந்தன.
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை காவல் ஆய்வாளர் பாமா தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிர்வாகப் பிரிவில் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கிருந்த கோப்புகள், ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, சில கோப்புகளை கைப்பற்றிய அதிகாரிகள், அது தொடர்பாக ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், ஊழியர்கள் நியமனம் தொடர்பாக திருக்கனூர், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.