சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தால் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் தாக்கம் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை - நாகப்பட்டினம் இடையே 3 கி.மீ. உயரத்தில் காற்றின் சங்கமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி, கடலூர், நாகை, அரியலூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ., ராயக்கோட்டை, வாழப்பாடியில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 33 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 5% அதிகம் என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.