திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் குறித்து செந்தில் பாலாஜி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவர் மீது நாமக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்து, எம்எல்ஏவாக உள்ளார்.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக நாமக்கல் நீதிமன்றத்தில் உள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.