இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசின் அப்துல் கலாம் விருதினை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.
சுதந்திர தினத்தன்று பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு விருதுகளை தமிழக அரசு அளித்து கௌரவிக்கிறது. மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ என்ற ஒரு விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும்.
இந்த விருதாளருக்கு 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்த விருது 2015 முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் அப்துல் கலாம் விருதுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சுதந்திரதினத்தன்று விருது பெற இஸ்ரோ தலைவர் சிவன் வராததால், வேறொரு நாளில் விருது வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழிசாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் பெற்றுக்கொண்டார்.