சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பு வகித்து வந்த நீதிபதிகள் எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகிய 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி 6 பேரும் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 75 . தற்போது தலைமை நீதிபதி உள்பட 58 பேர் நீதிபதிகளாக உள்ளனர். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள் தரப்பில் இருந்தும், வழக்குரைஞர்கள் தரப்பில் இருந்தும் நீதிபதிகள் தேர்வு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.