108 வளைவுகள், 250 பாலங்கள், 16 குகைகள் கொண்ட மலை ரயில் பாதையில் 150 ஆண்டு காலமாக இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
அழகிய மலைகள், அடர்ந்த வனங்கள், தேயிலைத் தோட்டங்கள், அருவிகள் நிறைந்த நீலகிரி மலை ரயில் பயணமானது மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சுமார் 60 கி.மீ. தூரம் கொண்டது.
இதில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் தண்டவாளங்களில் நின்று, படுத்துகொண்டு, இன்ஜின் முன் நின்று புகைப்படம், செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனைத் தடுக்கும் விதமாக தெற்கு ரயில்வே அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து நீலகிரி மலை ரயில் பாதையில், தண்டவாளத்தில், ரயில் நிலையங்களில் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தால், ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடந்து சென்றால் ரூ.1,000 அபராதம், பயணச்சீட்டு இன்றி நடைமேடைகளில் இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில் நிலையம், தண்டவாளங்களில் குப்பை கொட்டினால் ரூ.200, அசுத்தம் செய்தால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.
இதற்கான அறிவிப்பு துண்டு பிரசுரங்கள், ஊட்டி, குன்னுார், கேத்தி ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.