உதகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவதைப் போல கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்காவிலும் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை செய்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அரசு பழத்தோட்டத்தில் ரூ. 4 கோடியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப் பூங்காவில் செயற்கை நீரூற்று, சிறுவர் பூங்கா, மூங்கில் பூங்கா, மூலிகைத் தோட்டம், பூந்தோட்டம், அலங்காரச் செடிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தோட்டக்கலைத் துறைக்கு ரூ.77 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அசோக் மேக்ரின் கூறியது: கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சபரிமலை சீசன், கோடை விடுமுறை, பொங்கல், ஓணம், நவராத்திரி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில், சுற்றுச்சூழல் பூங்காவில் ரூ. 2 கோடியில் மீன் கண்காட்சி, ரூ. 50 லட்சத்தில் இசை நீரூற்று ஆகியவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மலர் கண்காட்சி: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதே போல குமரி சுற்றுச்சூழல் பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்த அரசிடம் தோட்டக்கலைத் துறை சார்பில் பரிந்துரை செய்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்ததும், நிகழாண்டு டிசம்பர் மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும் என்றார் அவர்.