நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம், நிலவை இரண்டாவது முறையாக படம் பிடித்து அனுப்பியிருக்கிறது.
இந்தப் படங்கள் பொதுமக்கள் பார்வைக்காக இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, புவி சுற்றுவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.
முதல் படம்: புவியை சுற்றி வந்துகொண்டிருந்த விண்கலம், லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள எல்.ஐ.4 கேமரா மூலமாக கடந்த 3-ஆம் தேதியன்று பூமியை மிக அழகாகவும், தெளிவாகவும் புகைப்படங்களை எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது. தொடர்ந்து புவியை சுற்றிவந்த விண்கலம், கடந்த 14-ஆம் தேதி நிலவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தது. ஆறு நாள்கள் பயணத்துக்குப் பின்னர், கடந்த 20-ஆம் தேதி நிலவின் நீள்வட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
நிலவின் முதல் படம்: நிலவைச் சுற்றிவரும் விண்கலம், லேண்டரில் உள்ள எல்.ஐ.4 கேமரா மூலமாக, கடந்த 21-ஆம் தேதி இரவு 7.03 மணியளவில், நிலவின் பரப்பிலிருந்து 2,650 கி.மீ. தொலைவில் இருந்தபடி, நிலவை முதல் முறையாகப் படம் பிடித்து அனுப்பியது. அதில் நிலவின் பரப்பில் இடம்பெற்றிருக்கும் அப்போலோ மற்றும் மேர் ஓரியண்டல் பள்ளத்தாக்குகள் தெளிவாகக் காட்சி
யளித்தன.
இரண்டாவது முறையாக...: இந்த நிலையில், விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் டி.எம்.சி.-2 (நிலப்பரப்பைப் படம் பிடிக்கும் கேமரா) மூலமாக கடந்த 23-ஆம் தேதி இரவு 7.42 (சர்வதேச நேரம்) மணியளவில் மூன்று புகைப்படங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
முதல் புகைப்படத்தில் நிலவின் வடக்கு அரைவட்டப் பரப்பில் இடம்பெற்றிருக்கும் 71 கி.மீ. விட்டமுள்ள ஜேக்சன் பள்ளத்தாக்கு, மேற்கே எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் மேக் மற்றும் 92 கி.மீ. விட்டமுள்ள மித்ரா பள்ளத்தாக்குகள் மட்டுமின்றி மிகப்பெரிய 437 கி.மீ. விட்டமுள்ள கோரோவ் பள்ளத்தாக்குகள் என பல்வேறு அளவிலுடைய ஏராளமான பள்ளத்தாக்குகள் காட்சி தருகின்றன.
இரண்டாவது புகைப்படத்தில் 169 கி.மீ. விட்டமுள்ள சோமர்பெல்ட் பள்ளத்தாக்கு, 68 கி.மீ. விட்டமுள்ள கிர்க்வூட் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பள்ளத்தாக்குகள் காட்சி தருகின்றன.
மூன்றாவது புகைப்படத்தில் நிலவின் வடதுருவப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் பிளாஸ்கெட், ரோல்டெஸ்ட்வென்ஸ்கி, ஹெர்மைட் உள்ளிட்ட பள்ளத்தாக்குகள் காட்சி தருகின்றன. இந்தப் புகைப்படங்கள் நிலவின் பரப்பிலிருந்து 4,375 கி.மீ. தொலைவில் இருந்தபடி டி.எம்.சி.-2 கேமரா படம் பிடித்துள்ளது.