திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கீழ்பழந்தை கிராமத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் பல்லவர் கால கல்வெட்டும், விஜயநகர கால கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்வெட்டுகள் குறித்து, அதே கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் கே.இ.ரங்கராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்தக் கல்வெட்டினை தொல்லியல் அறிஞர்அர.பூங்குன்றன், கல்வெட்டு ஆய்வாளர் ப.பூபாலன், சென்னையில் உள்ள உவேசா நூலக காப்பாட்சியர் கோ.உத்திராடம் ஆகியோர் படியெடுத்து ஆய்வு செய்தனர். இதில் பல்லவர் கால கல்வெட்டு, பிற்கால பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் காலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நிருபதுங்கவர்மனின் ஆட்சியில் 16-ஆவது ஆண்டில் (கி.பி.866) கீழ்பழந்தையில் உள்ள மகாதேவர் கோயில் வழிபாட்டிற்காக காலூருடையான் என்பவர் கழஞ்சு பொன் கொடுத்து, இவற்றின் மூலம் வரும் வட்டியைக் கொண்டு, தினந்தோறும் நாழி அரிசியும் உழக்கு நெய்யும் பூசைக்கு வழங்கப்பட்டதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்தக் கல்வெட்டு நீண்ட செவ்வக வடிவ கல்லில் இருபுறங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள் முற்றிலும் பொரிந்த நிலையில் காணப்படுகின்றன.
விஜயநகர கால கல்வெட்டு கி.பி.1597-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு இரு துண்டுகளாகச் சிதைந்து காணப்படுகிறது. இந்தக் கள ஆய்வின்போது, இப்பகுதியில் பல்லவர் கால விநாயகர், சண்டிகேசுவரர் சிற்பங்கள் ஆகியவையும் கண்டு பிடிக்கப்பட்டன.