பல்வேறு வகையிலான தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சென்னை ஐஐடி-யில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தை, மத்திய கனரக தொழில் துறைச் செயலர் ஏ.ஆர். சியாக் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
மத்திய கனரக தொழில் துறை நிதி உதவியுடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மையம், லாப நோக்கின்றி சேவை அடிப்படையில் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி நவீன தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான தீர்வுகளை அளிக்கும். அத்துடன், தொழில்நிறுவனங்களின் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு பகுதி நிதியுதவியையும் இந்த மையம் அளிக்க உள்ளது.
மையத்தைத் தொடக்கி வைத்த மத்திய அரசுச் செயலர் சியாக் கூறுகையில், அரசு - கல்வி நிறுவனம் - தொழில் நிறுவனம் கூட்டு முயற்சிக்கு உதாரணமாக விளங்கப்போகும் இந்த மையம், தொழில் நிறுவனங்களின் சிக்கலான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்குத் தீர்வளித்து, அதன் மூலம் நாட்டின் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கும் உதவ உள்ளது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, இந்திய இயந்திர உபகரண உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.