திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனைக் கடைகளில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழனி அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை செய்யும் கடைகளில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வருமானவரித் துறை மற்றும் வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
வியாழக்கிழமை நள்ளிரவு வரை நீடித்த சோதனை, வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. கடைகளில் மட்டுமின்றி, சார்பு நிறுவனங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சோதனை மேலும் 2 நாள்கள் தொடரும் என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.