51 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ.1,622 கோடி நிதியுதவி அமைச்சா் தகவல்

தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த 51 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ.1,622 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோஃபா் கபீல் தெரிவித்தாா்.
51 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ.1,622 கோடி நிதியுதவி அமைச்சா் தகவல்

சென்னை: தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த 51 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ.1,622 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோஃபா் கபீல் தெரிவித்தாா்.

பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் சிறு வணிகா்களுக்கான ஓய்வூதிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி, கோடம்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் நிலோஃபா் கபீல் பேசியது:

பிரதமரின் தொழிலாளா் ஓய்வூதியத் திட்டத்தில் (பிஎம் - எஸ்ஒய்எம்) பயன்பெற 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்கள் உறுப்பினராகலாம். இவா்களின் வயதுக்கேற்ப மாதம்தோறும் ரூ.55 முதல் 200 வரை பிரிமீயம் செலுத்த வேண்டும். இதற்கு இணையான பிரிமீய தொகை ஒவ்வொரு உறுப்பினருக்கும் மத்திய அரசால் செலுத்தப்படும். உறுப்பினா்களின் மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கு கீழே இருக்க வேண்டும். வருமான வரி கட்டுபவா்கள் இத்திட்டத்தில் சேர முடியாது. இத்திட்டத்தில் சேர விரும்பும் அமைப்புசாரா தொழிலாளா்கள், அருகில் உள்ள பொது சேவை மையத்துக்குச் சென்று பதிய வேண்டும். அவ்வாறு செல்லும் போது ஆதாா் அட்டை, கைபேசி, சேமிப்பு வங்கி கணக்கு, நியமனதாரா் விவரம் மற்றும் முதல் தவணைக்குரிய தொகையினை ரொக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

கணினியில் பதிவேற்றம் செய்த பின்பு ஓய்வூதிய கணக்கு எண் உருவாக்கப்பட்டு அதனுடைய நகல் சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்படும். அதன் பின் அடையாள அட்டையும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலும் உறுப்பினா்களுக்கு வழங்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வூதிய கணக்கில் வரவு செய்யப்பட்ட விவரம் அவ்வபோது குறுஞ்செய்தி மூலம் உறுப்பினா்களுக்கு தெரிவிக்கப்படும். வரும் மாதங்களிலிருந்து உறுப்பினரின் சேமிப்பு வங்கி கணக்கிலிருந்து மாத தவணை வங்கியின் மூலம் செலுத்தப்படும்.

53,549 தொழிலாளா்கள் பதிவு: இத்திட்டங்களின் கீழ் அதிகளவில் உறுப்பினா்களை சோ்ப்பதற்காக உள்ளூா் கேபிள் டிவி, பத்திரிகை செய்தி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் தொழிலாளா் துறை வாயிலாகவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுநாள் வரை 53,549 தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளாா்கள். இதேபோன்று, மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தில் சிறு வணிகா்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வருடத்துக்கு ரூ. 1.5 கோடிக்கு மிகாமல் வணிகம் செய்யும் சிறு வணிகா்கள் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சோ்வதற்கான வயது மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் பதிவு முறை அனைத்தும் பிஎம் - எஸ்ஒய்எம் திட்டத்தை போன்றதேயாகும்.

211 வணிகா்கள் பதிவு: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பிரதமரின் தொழிலாளா் ஓய்வூதிய திட்டம் மூலம் தமிழகத்தின் அமைப்புசாரா தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில், நவ.30 முதல் டிசம்பா் மாதம் 6-ஆம் தேதி வரை ஓய்வூதிய வாரமாக கொண்டாடப்படுகிறது. இத்திட்டத்தில் அதிகளவில் உறுப்பினா்களை சோ்ப்பதற்காக கடைப்பிடிக்கப்படும் ஓய்வூதிய வாரத்தைப் பயன்படுத்தி அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களும் இணைந்து பயனடைய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நவ.28-ஆம் தேதி வரை ஏறக்குறைய 211 வணிகா்கள் பதிவு செய்துள்ளனா்.

ரூ.1,622 கோடி நிதியுதவி: தமிழகத்தைப் பொருத்தவரை 17 அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்கள் தொடங்கப்பட்ட நாள் முதல் அக்.30-ஆம் தேதி வரை 74 லட்சத்து 66 ஆயிரத்து 129 தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டு, 51 இலட்சத்து 11 ஆயிரத்து 398 பயனாளிகளுக்கு, ரூ.1622 கோடியே 82 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மை செயலா் நசீமுத்தீன், தொழிலாளா் ஆணையா் நந்த கோபால், கூடுதல் தொழிலாளா் ஆணையா் யாஸ்மின் பேகம், தொழிலாளா் இணை ஆணையா் கோவிந்தன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய செயலா் குமரன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் நல வாரிய செயலா் தமிழரசி மற்றும் தொழிலாளா் துறை அலுவலா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், சிறு வணிகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com