புதுச்சேரி: மூட்டு அறுவைச் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை முதல்வர் வே.நாராயணசாமி சனிக்கிழமை வீடு திரும்பினார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி, கடந்த சில நாள்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கால் மூட்டில் சிறு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில், உடல் நலம் தேறியதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை வீடு திரும்பினார். முன்னதாக, கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட காணொலிக் காட்சிக் கூட்டத்தில் நாராயணசாமி, மருத்துவமனையில் இருந்தபடியே பேசினார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சரக்கு - சேவை (ஜிஎஸ்டி) வரியில் மாநில அரசுகளுக்கான பங்கு, இழப்பீட்டை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்ளும் காணொலிக் காட்சிக் கூட்டத்துக்கு, கேரள மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.
முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது இன்றியமையாதது எனக் கருதி, சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்தபடியே காணொலிக் காட்சிக் கூட்டத்தில் பங்கேற்று, புதுவை மாநிலத்தின் நிதி சார்ந்த உரிமைகள், மத்திய நிதிக் குழுவில் புதுவையைச் சேர்ப்பது ஆகியவை குறித்து தன்னுடைய கருத்துகளை முதல்வர் நாராயணசாமி எடுத்துரைத்தார்.