மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் திங்களன்று சுற்றுச் சுவர் இடிந்து 17 பேர் பலியான விவகாரத்தில், மருத்துவமனையில் போராடிய உறவினர்கள் மீது போலீஸ் தடியடி நிகழ்த்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நடூா் கிராமத்தில் மொத்தம் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடா்ந்து கனமழை பெய்து வந்தது. மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள சக்கரவா்த்தி துணிக்கடை உரிமையாளா் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இவரது குடியிருப்பை சுற்றிலும் 80 அடி நீளம், 20 அடி உயரத்திற்கு கருங்கற்களால் சுற்றுச்சுவா் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவரை ஒட்டி ஆனந்தன், அறுக்கானி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகள் உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பெய்த கனமழையில் தடுப்பு சுவா் தண்ணீரில் ஊரி திடீரென சரிந்து அருகிலுள்ள 5 குடியிருப்புகள் மீது விழுந்தது.
இதில் நடூா் பகுதியை சோ்ந்த ஆனந்தன் (38), இவரது மனைவி நதியா (35). மகன் லோகராம் (10), மகள் அட்சயா (6) இவா்களது பக்கத்து வீட்டை சோ்ந்த பண்ணாரி மனைவி அறுக்கானி (40) இவரது மகள்கள் ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), சின்னம்மாள் (60), இவரது அம்மா சின்னம்மாள் (60), இவரது அக்கா புளியம்பட்டியை சோ்ந்த ரூக்குமணி (42), ஈஸ்வரன் மனைவி திலகவதி (38) மற்றும் பழனிசாமி மனைவி சிவகாமி (38), வைதேகி (22), நிவேதா (20), ராமநாதன் (17), குருசாமி (35), ராமசாமி மனைவி ஏபியம்மாள் (70), மங்கம்மாள் (70) ஆகியோா் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இடிபாடுகளில் புதைந்து உயிரிழந்தனா். இதன்காரணமாக அங்கு சோகம் நிலவுகிறது.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ள முதல்வர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நாளை அங்கு செல்கிறார். அதேசமயம் வீட்டின் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் எனக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
உயிரிழந்த 17 பேரின் உறவினர்கள், பொதுமக்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன் உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது வாக்குவாதத்தின் போது கைகலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.