சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கத் தடை விதிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்றும், இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும்; மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி திங்கள் காலை அறிவித்தார்.
அத்துடன் நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கத் தடை விதிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கை வெளியானதையொட்டி மாநில அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தடை விதிக்கப்படுகிறது. அதேபோல புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடக்கூடாது. அத்துடன் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியையும் எந்த ஒரு திட்டத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.