சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவில் பெய்துள்ளதா என்பதற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை - தென் தமிழகக் கடலோரப் பகுதிக்கு அருகே காற்றழுத்தத்தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுகிறது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ. மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழையைப் பொறுத்தவரை ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களைப் பொறுத்தவரை
குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்றானது மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால், இன்று மீனவர்கள் குமரிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக் கூடும்.
வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 42 செ.மீ. அளவுக்கு பெய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 36 செ.மீ. இது இயல்பை விட 13 சதவீதம் அதிகம் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.