சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிரான ஐந்து அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்களை விமர்சித்ததாக அவர் மீது ஐந்து அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடுத்திருந்தது.
பின்னர் தன்மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இவ்வாண்டு துவக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அதேபோல் இந்த கூட்டணியானது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிரான ஐந்து அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
முன்னதாக தன்மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை சமீபத்தில் விஜயகாந்த் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது