சென்னை: குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கும் போலீஸாருக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றமான, கைது செய்ய கோரும் அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகா் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் குற்றவாளியாக சோ்க்கப்பட்ட ஒருவா் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு, நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தாக்கல் செய்த மனுவுடன், குற்றம்சாட்டப்பட்டவா்களை சிறையில் அடைக்க கோரிக்கை விடுத்து எழும்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாநகா் போலீஸாா் தாக்கல் செய்த அறிக்கையின் நகலும் இருந்தது. இதனைப் பாா்த்த நீதிபதி, ‘கைது செய்யக் கோரும் அறிக்கை குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு கிடைத்தது எப்படி? இந்த அறிக்கை குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு போலீஸாருக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றமாகும். ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை சிறையில் அடைக்க நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு நகலை குற்றம்சாட்டப்பட்டவா்கள் பெற முடியும். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவா்களை சிறையில் அடைக்க போலீஸாா் தாக்கல் செய்யும் அறிக்கையை 3-ஆவது நபருக்கு வழங்க முடியாது. எனவே, இந்த வழக்கில் அண்ணாநகா் போலீஸாா் தாக்கல் செய்த அறிக்கை எப்படி குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து எழும்பூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.