தருமபுரம் ஆதீனம் மறைவு: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்
By DIN | Published on : 04th December 2019 05:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் மறைவு
சென்னை: தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் மறைவுக்கு பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் இன்று (04/12/2019) பரிபூரணமடைந்துள்ளார்.
தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்று 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் எண்ணற்ற சைவ இலக்கியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு பல கருத்தரங்குகளை நடத்தி தமிழுக்கு பெருந்தொண்டாற்றி வந்ததும், தமிழ் தொண்டே இறைத்தொண்டு என்று செயலாற்றியதில் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் பங்கு அதிகம்.
குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளின் மறைவு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரது பிரிவைத் தாங்கும் மன வலிமையை பக்தர்களுக்கும், ஆதீனத்தைச் சார்ந்தவர்களுக்கும் வழங்கிட அன்னை பராசக்தியை வேண்டுகிறேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.