சென்னை - திண்டிவனம் சாலை விரிவாக்கம்: ராமதாஸ் வரவேற்பு

சென்னை - திண்டிவனம் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: சென்னை - திண்டிவனம் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் மிக முக்கியமான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் - திண்டிவனம் இடையிலான பகுதியை 8 வழிச்சாலையாகவும், 6 வழி பறக்கும் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழக மக்களின் 15 ஆண்டுகால கனவு இதன் மூலம் நனவாகிறது. இது பாமகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

சென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு இடையிலான 24.5 கி.மீ. நீள பாதை ரூ. 3,309 கோடியில் பறக்கும் சாலையாக அமைக்கப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான 68.50 கி.மீ. நீள சாலை ரூ.3,062 கோடியில் 8 வழிச்சாலையாக அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான முன் தகுதி காண் ஒப்பந்தப் புள்ளிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கோரியிருக்கிறது. இந்த ஆயத்தப் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி முடிவடைந்தால், அடுத்த ஓராண்டுக்குள் தாம்பரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய சாலைகள் சங்கம் வகுத்துள்ள விதிகளின்படி ஒரு சாலையில் ஒரு நாளைக்கு 12,000-க்கும் கூடுதலான வாகனங்கள் பயணித்தால் அந்தச் சாலை 6 வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட வேண்டும். ஆனால், அதை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அளவுக்கு, அதாவது ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணம் செய்யும்போதிலும் தாம்பரம் - திண்டிவனம் சாலை 4 வழிச்சாலையாகவே தொடா்கிறது. இந்த நிலைக்கு இப்போதாவது முடிவு கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com