சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்துக் கிராமப்புற, ஒன்றிய, மாவட்ட அளவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் மறு அறிவிப்பாணையை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் வெளியிட்டார்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களை நீதி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த தேர்தல் மக்கள் நலுனுக்கானதாக இருக்கப் போவதில்லை. இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகம்தான் இது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறும் எனவே உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.