ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த எட்டு மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசய சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் மெய்பால்-நீலம் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்தக் குடியிருப்பில் முதல் தளத்தில் கடைகளும், மற்ற தளங்களில் குடும்பங்களும் உள்ளன. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட தம்பதியரின் எட்டு மாத குழந்தை ஜெனீஷா, மாடியில் விளையாடிக்கொண்டிருந்தது. குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் சமையலறையில் இருந்த சமயத்தில் மாடி அறையில் இருந்து குழந்தை பால்கனிக்கு தவழ்ந்து வந்தது.
சிறிது நேரத்தில் ஐந்தாவது மாடியில் இருந்து குழந்தை கீழே விழுந்தது. கீழே இருந்த ஊழியர்கள் இதனை பார்த்து, உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மருத்துவமனை விரைந்தனர்.
குழந்தையின் காலில் எலும்பு முறிவு மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது. மிகவும் அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர்பிழைத்துள்ளது. தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தங்களுக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்ததாகவும், இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.