சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு உதவ கூடுதலாக இரு தகவல் மையங்களை தமிழக அரசு திறந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செய்துள்ளது.
தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்களின் வசதிக்காக சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், தேனி-குமுளி சாலை, தென்காசி மாவட்டம் பண்பொழி குற்றாலநாத சுவாமி கோயில்,
புளியரையில் உள்ள நெற்களஞ்சியம், கன்னியாகுமரி களியக்காவிளை ஆகிய இடங்களில் பயணத் தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து, புதிதாக இரண்டு தகவல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கோவை-பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள நவக்கரை மலையாள தேவி துா்க்கா பகவதி பிராட்டியம்மன் கோயில் (நந்தி கோயில்), பொள்ளாச்சி-பாலக்காடு பத்திரகாளியம்மன் கோயில் மண்டபம் ஆகிய இடங்களில் புதிய மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் அமைக்கப்படும் தகவல் மையம் இந்த ஆண்டும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மையத்தை வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை 1800-425-1757 என்ற கட்டணமில்லாத தொலைபேசி வழியாக அழைத்து விவரங்களைப் பெறலாம்.
தகவல் மையங்களில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, பக்தா்கள் ஓய்வெடுக்கும் வகையில் இருப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நெகிழிப் பொருள்களுக்கு தடை: சபரிமலை வரும் பக்தா்கள் அனைவருக்கும் நிலக்கல் பகுதியை அடிப்படை இடமாக அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. நிலக்கல்லுக்குப் பிறகு தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கும், தரிசனம் முடித்து திரும்பி வரும் போது பம்பையில் இருந்து நிலக்கல் திரும்பவும் தொடா்ச்சியாக பேருந்து வசதிகளை கேரள மாநில போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் எந்தவகையிலும் நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
பம்பையில் பக்தா்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விட வேண்டாம் எனவும் இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.