உள்ளாட்சித் தேர்தல்: திமுகவின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த பிறப்பித்திருந்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை என்று வெள்ளிக்கிழமை திட்டவட்டமாகத்
உள்ளாட்சித் தேர்தல்: திமுகவின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த பிறப்பித்திருந்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை என்று வெள்ளிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக திமுக விடுத்த கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 2-இல் வெளியிட்டது. இந்நிலையில், மறுவரையறைப் பணிகளை மேற்கொள்ளாமல் தேர்தல் நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தலை நடத்துவதற்கு அனுமதி அளித்து டிசம்பர் 6-இல் உத்தரவிட்டது. மேலும், புதிய 9 மாவட்டங்களிலும் நான்கு மாதங்களில் மறுவரையறைப் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை டிசம்பர் 7-இல் புதிதாக வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்கள் டிசம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் அமர்வு விசாரித்து உத்தரவைப் பிறப்பித்தது. அதில், "மறுவரையறைப் பணிகளை நடத்திய பிறகு மறுவரையறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பொருள்படுத்தாமல், தேர்தலை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என்று மாநில அரசு, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், 9 புதிய மாவட்டங்களுக்கான மறுவரையறைப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மீண்டும் முறையீடு: இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆஜராகி, உத்தரவில் குறிப்பிட்டுள்ள "பொருள்படுத்தாமல்' எனும் வார்த்தை குறித்து தெளிவுபடுத்துமாறு கோரினர். இதற்கு தமிழக அரசு, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது, திமுகவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்களிடம் நீதிபதிகள், "நீங்கள் தேர்தலை விரும்பவில்லை என்பது போலத் தெரிகிறதே' என்றார். அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, "வார்டு மறுவரையறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்த உத்தரவு விவரத்தைத்தான் தெளிவுபடுத்த கோருகிறோம்' என்றார். 

அதற்கு தலைமை நீதிபதி, "தமிழக உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக டிசம்பர் 11-ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை, எந்தவொரு சட்டத்தையும் மீறும் என்ற வகையில் வாசிக்க முடியாது' என்று தெரிவித்து திமுக தரப்பின் கோரிக்கையை நிராகரித்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com