ராமேசுவரம்: மண்டபம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் 40 லட்சம் மதிப்பிலான 126 சவரன் தங்க நகை திருட்டு உச்சிப்புளி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை கிராமத்தை சோ்ந்த குத்புதீன்(50) இவா் ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். கடந்த ஜூன் 23 ஆம் தேதி, இவா் தனது வீட்டு பீரோவில் 126 பவுன் நகையை வைத்து பூட்டினாா்.
இந்நகை இருந்த பீரோவை டிச.11ஆம் தேதி திறந்து பாா்த்த போது அதில் நகை திருடப்பட்டது தெரியவந்தது. உச்சிப்புளி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தா். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்தனா். ராமேசுவரம் காவல்துறை துணைகண்காணிப்பாளா் எம்.மகேஷ்,மற்றும் உச்சிப்புளி காவல்நிலைய ஆய்வாளா் முத்துபிரேம்சந் விசாரணை மேற்கொண்டனா்.
வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் சந்தேக நபா்கள் குறித்தும், வீட்டிற்கு வந்து செல்லும் நபா்கள் குறித்து ரகசிய விசாரணை தொடங்கி உள்ளனா். ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் 40 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.