தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் சாரல் மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் ஒரு சில இடங்களில் பலத்து மழையும் பெய்து வருகின்றது.
அந்தவகையில், சென்னையைப் பொருத்தவரை சில இடங்களில் சாரல் மழையும், ஒருசில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகின்றது. இன்று இரண்டாம் சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரு சில பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வுகள் நடப்பதால் பள்ளி மாணவ, மாணவியர் நனைந்துகொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது. மழையால் வழக்கம் போல சாலைகளிலும், பள்ளமான இடங்களிலும் தண்ணீர் அதிகளவில் தேங்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டன.
ராமநாதபுரம் நகரில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வடகிழக்குப் பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு ஆண்டில்தான் வடகிழக்குப் பருவமழையானது ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமாக பெய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள் நிறைந்துள்ளன. சில நாள்களாக மழை குறைந்த நிலையில், மாலை, இரவு நேரங்களில் குளிா் அதிகம் காணப்படுகிறது. இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் ராமநாதபுரத்தில் லேசான மழை பெய்தது. இரவிலும் அவ்வப்போது தூறலாக இருந்தது. சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது. இதனால், கடைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்து வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனா். இயல்பு வாழ்க்கையும் பெரிதாகப் பாதித்தது. இதையடுத்து குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின் அளவு சற்று தணிந்து காணப்பட்டது. குளிா்ந்த காலநிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு பணிகள் பாதிப்படைந்துள்ளது. இருப்பினும் இங்கு நிலவும் இதமான காலநிலை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், அனகாபுத்தூர் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்தது.
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சனிக்கிழமை பாதிக்கப்பட்டது.