குடியுரிமை சட்ட திருத்த மசோதா அமலுக்கு வர அதிமுக தான் காரணம் என்று வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து திமுக சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று பேசியது }
போலீஸôர் நமக்கு ஆதரவாக இங்கு வந்து இருப்பதாக கூறினார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகுதான் தெரியும் ஆதரவு தெரிவிக்கிறார்களா, இல்லை லாரியில் ஏற்றுகிறார்களா என்று. கரூரில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸôர் அனுமதி மறுப்பதாக ஸ்டாலின் என்னிடம் கூறினார்.
இங்கே அதிக அளவு போலீஸாரை குவித்து அதிமுக அரசு நமக்கு இலவச விளம்பரம் தேடி தந்துள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கொண்டு வரும் போது எளிதில் நிறைவேற்றி விட்டார்கள். ஆனால் மாநிலங்களவையில் வரும்போது சற்று சிக்கல் ஏற்பட்டது. அப்போது அதிமுக ஆதரவு தெரிவித்ததால் அங்கேயும் சட்டம் அமலுக்கு வந்தது என்றார்
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு துரைமுருகனிடம் கரூரில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், போலீஸில் சில அறியாதவர்கள் உள்ளனர். அதேபோல் கரூரில் அந்த அறியவர்கள் இருக்கிறார்கள். வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டாலும் கூட அதிகளவு தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது இலங்கை தமிழர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என அதிமுகவை வலியுறுத்தினர்.
ஆனால் அதிமுகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வர அதிமுக தான் காரணம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், காத்தவராயன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.