சென்னை கிண்டி மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மான்களை வேறு இடங்களுக்கு மாற்ற தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் 1500 மான்கள் உள்ளன. இந்த மான்களை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
இந்த மான்களை பிடிக்கவும், வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவும் வனத்துறைக்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மான்களை வேறு இடங்களுக்கு மாற்ற தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் விலங்குகள் இடமாற்றம் தொடர்பாக விதிகள் வகுக்க வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது.