சென்னை: சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சரவணை ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் தி.நகர், பாடியில் உள்ள லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், ஜி.எஸ்.ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 74 இடங்களில் கடந்த 3 தினங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த அதிரடி சோதனையில் அந்நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எவ்வளவு வரிஏய்ப்பு நடந்தது என்பது குறித்த தகவலை வருமானவரித்துறையினர் அப்போது வெளியிடவில்லை.
கடந்த 6 நாட்களாக கணக்கிடுதல், மதிப்பிடுதல் மற்றும் ஆய்வு நடைபெற்று வந்த நிலையில், இன்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஜனவரி 29 ம் தேதி முதல் 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று வரை கணக்கீடு செய்யப்பட்டன. இதில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிரடி சோதனையில் 70 வருமான வரித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுத்தப்பட்டனர்.
வரி ஏய்ப்பு தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையால் தமிழகத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது.