அந்நியச் செலாவணி வழக்கில் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்குக்கு அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜெ.ஜெ.தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் இறக்குமதி செய்ததில் அந்நியச் செலாவணி மோசடி நடந்ததாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், ஜெ.ஜெ.தொலைக்காட்சியின் இயக்குநராக இருந்த வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு ரூ.18 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறையினர் கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தில்லியில் உள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மனுவை சசிகலா காலதாமதமாக தாக்கல் செய்துள்ளதாகக் கூறி தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் மத்திய அமலாக்கப்பிரிவு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து தனது மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.