திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், சென்னை வண்ணாரப்பேட்டை-டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அரசு விழாவில், சென்னை வண்ணாரப்பேட்டை-டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, நீல வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், உயர் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்வருடன் இணைந்து திறந்துவைத்தார்.
மேலும், சென்னை, திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி வரையிலான கச்சா எண்ணெய்க் குழாய் திட்டத்தை நாட்டுக்கு அவர்அர்ப்பணித்தார்.
அதேபோல, திருப்பூரில் ரூ. 75 கோடி மதிப்பில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை கே.கே. நகரில் 470 படுக்கைகள் கொண்ட அதி நவீன இ.எஸ்.ஐ. மருத்துவமனையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா, திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.