கஜா புயலின்போது நிலவேம்புக் குடிநீரை மக்களுக்கு அதிக அளவில் விநியோகித்து டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சலை கட்டுப்படுத்தியதாக தமிழக அரசுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அதேபோன்று கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து மருந்துகள் அடங்கிய சஞ்சீவி பெட்டகத்தை வழங்கி வருவதும் சிறப்பான நடவடிக்கை என்று மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
ஆயுர்வேதம், யுனானி, சித்தா, யோகா, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவங்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு தில்லியில் அண்மையில் நடைபெற்றது.
அதில், கலந்து கொண்ட தமிழக பிரதிநிதிகள், மாநிலத்தில் ஆயுஷ் திட்டங்களை அமல்படுத்துவதற்கும், பாரம்பரிய மருத்துவங்களை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர். அவற்றை கேட்டறிந்த மத்திய ஆயுஷ் துறை அமைச்சரும், அதிகாரிகளும் தமிழகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டினர்.
இந்திய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் அனைத்து நடவடிக்கைகளில் தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.