தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாவட்ட மாநாடு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பங்கேற்று பேசியதாவது:
வருகிற 27-ஆம் தேதி கோவையில், இந்தியாவை மீட்போம்; தமிழகத்தை காப்போம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி அறிவித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் 14 துப்புரவுப் பணியிடங்களுக்கு அண்மையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
அதற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, வாக்குறுதிகளை வழங்குவதில் மன்னர். அவர் மக்களையும், நாடாளுமன்றத்தையும் ஏமாற்றி வருகிறார்.
வருகிற மக்களவைத் தேர்தலில்போது தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆளும் கட்சிக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்றார் அவர்.
பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் கே.சுப்புராயன், மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாவட்டச் செயலர் மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.