சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சேர விரும்பாத அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் வாதம்

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் சேர விருப்பம் இல்லாத காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சேர விரும்பாத அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் வாதம்


சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் சேர விருப்பம் இல்லாத காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பழைமையான சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த அமர்வு முன் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நியமிக்கப்பட்ட 104 போலீஸாரில், 15 பேர் இந்த பிரிவில் சேர விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். 
எனவே அவர்களுக்குப் பதிலாக விருப்பம் உள்ள நபர்களை சிறப்பு அதிகாரி நியமிக்கலாம் எனத் தெரிவித்தார். அப்போது சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சேர விருப்பம் இல்லை எனக்கூறிய நபர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் தமிழக காவல்துறை டிஜிபி பிறப்பித்த உத்தரவை பின்பற்றத் தவறிய காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க முயன்றால் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எழுகிறது எனத் தெரிவித்தார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்ற வேண்டியது போலீஸாரின் கடமை. எனவே சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் சேர விருப்பம் இல்லாத காவல்துறை அதிகாரிகள் சிறப்பு அதிகாரி முன் ஆஜராகி கலந்தாலோசித்து முடிவு எடுக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 
ரன்வீர்ஷா விவகாரம்: ரன்வீர் ஷாவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இதே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முன்ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தி, சனிக்கிழமை தோறும் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர். 
அதே போல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், கிரண்ராவ் மற்றும் தீனதயாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாக்கல் செய்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர். 
மேலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிலை மாயமான விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான அறநிலையத்துறையின் விசாரணையை நிறுத்தி வைக்கவும், அறநிலையத்துறை ஆணையர்  இதுதொடர்பாக அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலை காபி கடை விவகாரம்: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கோயிலை இடித்து காபி கடை கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com