தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக டிசம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து, சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்னை விமான நிலையம் வந்தார்.
ஆனால், விமான நிலையத்தில் இருந்து வெளியே வராமல் ஓய்வறையிலேயே விஜயகாந்த் தங்கியிருந்தார். காலை 8.30 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவார் என சொல்லப்பட்ட நிலையில், தேமுதிக தொண்டர்கள் அங்கு அதிக அளவில் குவிந்திருந்தனர்.
ஆனால், விஜயகாந்த் வெளியே வரவில்லை. இதனால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
இந்த நிலையில், பகல் 12.30 மணியளவில் பேட்டரி கார் மூலம் விஜயகாந்த் வெளியில் வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது, பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியது: விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். 25 மணி நேர விமானப் பயணத்தால் ஏற்பட்ட களைப்பால் ஓய்வறையில் தங்கியிருந்தார். உணவு சாப்பிட்டுவிட்டு, இப்போது வெளியில் வருகிறார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணியை எந்தக் கட்சியும் இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தின் பெரிய கட்சிகள் என்று நீங்கள் நினைக்கும் கட்சிகள் எல்லாம் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகின்றன.
கூட்டணி குறித்து இன்னும் 10 நாள்களில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார். பின்னர், விஜயகாந்த் காரில் புறப்பட்டு, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். வழி நெடுக தேமுதிகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.