மக்களவைத் தேர்தலில் ரஜினி போட்டியிடாதது அவரது கொள்கை எனவும், அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை வேளச்சேரியில் அரசு சார்பில், தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பிரசாரம், அறிக்கை ஆகியவற்றுக்கு தனித் தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, கூட்டணி குறித்து கட்சித் தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பாஜகவுடன் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தை அரசு ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இருக்கலாம்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கும் மெகா கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் தான் போட்டி. ரஜினி மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது அவருடைய கொள்கை. இந்த முடிவை எடுத்த அவருக்கு வாழ்த்துக்கள் என்றார் அவர்.